மதுரையில் 89 பயனாளிகளுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு திருவிழா

மத்திய அரசு வேலைவாய்ப்பு திருவிழா மதுரையில் சனிக்கிழமை (ஜூலை 12) அன்று மதுரை ரயில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 89 பயனாளிகளுக்கு மத்திய அரசு வேலைக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த விழா இந்தியா முழுவதும் 47 இடங்களில் நடைபெற்றது. இந்த விழாவினை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். 89 பயனாளிகளில் 30 பேருக்கு ரயில்வே துறையில் பணி வழங்கப்பட்டது. இந்த 30 பேரில் 18 பேருக்கு மதுரை ரயில்வே கோட்டத்திலும், தலா ஆறு பேருக்கு திருச்சி மற்றும் சேலம் கோட்டங்களிலும் பணி வழங்கப்பட்டது. மேலும் 19 பேருக்கு இந்திய தபால் துறையிலும், 16 பேருக்கு இந்திய யூனியன் வங்கியிலும், 10 பேருக்கு இந்தியன் வங்கியிலும், 6 பேருக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலும் பணி வழங்கப்பட்டது. மேலும் 6 பேருக்கு மத்திய சுகாதாரத் துறையிலும், 3 பேருக்கு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலும், ஒருவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவிலும் பணி வழங்கப்பட்டது. இந்த விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, இந்திய யூனியன் பாங்க் உதவி பொது மேலாளர் எம். எஸ். சபுமோன், தபால் துறை உதவி இயக்குனர் எம். பொன்னையா, இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை இணை ஆணையர் நரேஷ் சந்திர பால் சிங், மத்திய பல்கலைக்கழக பதிவாளர் ஆர். திருமுருகன், இணை பதிவாளர் ஏ. ஆர். வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags : Central Government Employment Festival for 89 beneficiaries in Madurai