அரிசியில் வலம்புரி சங்கை வைத்தால் அனைத்தும் தங்கமாக மாறும்: சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி

by Admin / 28-08-2021 01:32:45pm
அரிசியில் வலம்புரி சங்கை வைத்தால் அனைத்தும் தங்கமாக மாறும்: சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி

திருவண்ணாமலையில் அரிசியில் வலம்புரி சங்கை வைத்தால் அனைத்தும் தங்கமாக மாறும் எனக்கூறி, சதுரங்க வேட்டை பட பாணியில் 2 கோடி ரூபாய்க்கு வலம்புரி சங்கை விற்க  முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த கிரிவலப்பாதையில் வாலைசித்தர் ஆசிரமம் நடத்தி வரும் கோவிந்தராஜ், ஜோதிடராக உள்ளார். தண்டராம்பட்டை அடுத்த வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்த பரணியை தொடர்பு கொண்ட இவர், தங்களிடம் அபூர்வ வலம்புரி சங்கு இருப்பதாகவும், அந்த சங்கை வைத்திருப்பவர்கள் கோடீஸ்வரராகி விடுவார்கள் எனவும், அதன் மதிப்பு 2 கோடி ரூபாய் என்றும் கூறியுள்ளார். மேலும் பாலை ஊற்றினால் தயிராகும் என்றும், அரிசியை வைத்தால் தங்கமாகி விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பரணியை திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பாபா கோயில் அருகே வருமாறு அழைத்து உள்ளார். அதன்படி, அவர் அங்கு சென்று பார்த்த போது கோவிந்தராஜுடன் ஒரு கும்பல் இருந்து உள்ளது. இதனால் சந்தேகமடைந்த பரணி, அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 2 கோடி ரூபாய் மதிப்பிலான வலம்புரி சங்கை விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் கோவிந்தராஜ், குப்பன், நாகராஜ், சதீஷ், உப்பட 7 பேர் சிக்கினர். ஆனால் சங்கு கொண்டு வந்த நபர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வலம்புரி சங்கு எனக் கூறி போலி சங்கை ஏமாந்தவர்களிடம் மூளை சலவை செய்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்று மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
 

 

Tags :

Share via