அண்ணாமலையார் கோவிலில் ஆடி பௌர்ணமி கிரிவலம் ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

by Staff / 09-08-2025 10:23:02am
 அண்ணாமலையார் கோவிலில் ஆடி பௌர்ணமி கிரிவலம் ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.முக்கிய விழாவான பௌர்ணமி நாட்களில் பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம், இந்நிலையில் ஆடி மாத பௌர்ணமி நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு தொடங்கி இன்று பிற்பகல் 2.18 மணிக்கு முடிகிறது.

இந்நிலையில் ஆடி மாதம் பௌர்ணமி கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து நேற்று இரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். 

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்பட்டது, விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலையில் ரயில் நிலையத்தில் விடியற்காலை முதல் குவிந்தனர், ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது. 

ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர்.குறிப்பாக ரயில் புறப்பட்டு சென்றும் ஏராளமான பக்தர்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் நிலவியது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது. 

 

Tags : அண்ணாமலையார் கோவிலில் ஆடி பௌர்ணமி கிரிவலம் ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

Share via