ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது: சென்னையில் பரபரப்பு!    

by 1tamilnews Team / 31-08-2021 04:25:16pm
ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது: சென்னையில் பரபரப்பு!    


 
ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை முன்பு போராடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால் 100 ஆண்டுகள் புகழ்மிக்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரிகளை இணைக்க திமுக அரசு முடிவெடுத்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான அந்த பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் முடிவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்புகள் கிளம்பினாலும் திமுக அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், சென்னை கலைவாணர் அரங்கம் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெருமளவு கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட ஒபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்தனர்.

 

Tags :

Share via