ஈரோட்டில் பழுதாகி நின்ற லாரி.. 5 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து..

by Editor / 01-09-2021 07:47:42pm
 ஈரோட்டில் பழுதாகி நின்ற லாரி.. 5 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து..

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 27 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கின்றது. இந்த மலைப்பாதையில் தினசரி பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றது. அதிலும் குறிப்பாக திம்பம் மலைப்பாதையில் செல்லும் கனரக வாகனங்கள் இங்கு இருக்கின்ற கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் சரிந்து விபத்து ஏற்படுதல் மற்றும் பழுதாகி நிற்பது அடிக்கடி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குஜராத்திலிருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று ஊட்டிக்கு இந்த மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது.

அப்போது அதிகாலை 3 மணி அளவில் 9-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் வரிசையில் நின்றது. மேலும் பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆசனுர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு காலை 8 மணி அளவில் பழுதாகி நின்ற லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றுள்ளது. இவ்வாறு 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் வந்த பயணிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via