தமிழில் அர்ச்சனை திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

by Editor / 03-09-2021 09:34:39pm
தமிழில் அர்ச்சனை திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

கோயில்களில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 2008ம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை எனக் குறிப்பிட்டது. மேலும் குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

 

Tags :

Share via