குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி
கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மூதாட்டி ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதனையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து சென்றனர். இந்த நிலையில், நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, போலீசார் உயிரிழந்த மூதாட்டி குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர், ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி(75) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து, மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், அங்கு வந்த சரஸ்வதியின் உறவினர்கள் கதறி அழுதனர்.
Tags :