மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் வரவேற்பு
மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வரவேற்கிறது. நேர்மையான நிருவாகத்திற்கும் கல்வித்தரம் உயர்வதற்கும் அரசியல், பணம் ஆகியவையின்றி மாறுதல் கலந்தாய்வு கல்வி அதிகாரிகளுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவது வெளிப்படையான நிருவாகத்திற்கு வழிவகுக்கும். பள்ளிக்கல்வித்துறை பல்வேறு சீர்திருத்தங்களுக்கு முன் உதாரணமாக அமையும்.
மேலும் இதுவரை இயக்குநர் மூலம் தான் மாவட்டகல்வி அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு வந்தது. விரும்பும் இடங்களுக்கும் சொந்தஊருக்கும் செல்லமுடியாமல் சிரமம் இருந்தது. தற்போது பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் நடக்கும்போது வாய்ப்புகிடைக்கும். இதேபோன்று தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் தொடங்கி இடைநிலை ஆசிரியர்கள் வரை பூஜ்யம் காலிபணியிடம் அறிவித்து இடமாறுதல் கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம். வெளிப் படைத் தன்மையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்ட முதல்வரின் நிருவாகத்திற்கு மேலும் ஒரு மைல்கல். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செயலாளர், ஆணையர் ஆகியோர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags :