101 உரக்கடைகள் மீது வேளாண்மை துறை நடவடிக்கை

by Editor / 09-10-2021 06:42:11pm
101 உரக்கடைகள் மீது வேளாண்மை துறை நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை 3,391 உரக்கடைளில் ஆய்வு மேற்கொண்டது. இதில் உரக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட உரக்கடைகள் வேளாண்மைத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் சாதகமான பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  குறிப்பாக சம்பா நெல் நடவுப் பணிகள் 13.168 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு சம்பா நடவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் உரத்தேவை அதிகரித்துள்ளது. உரவிற்பனைத் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக்கண்காணிப்பு மையம் செயல்படுகிறது. விவசாயிகள் உரக் கண்காணிப்பு மையத்தினை தொடர்பு கொண்டு உரம் தொடர்பான புகார்களை பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகள் தெரிவிக்கும் புகார்மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 08.10.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் 3,391 தனியார் உரக் கடைகளில் வேளாண்மை துறையினரால் உரம் இருப்பு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை விற்பனை செய்தல் மற்றும் விற்பனை முனைய கருவியின் வாயிலாக பட்டியலிட்டு உரங்களை விற்பனை செய்தல் முதலான பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புத்தக இருப்பு, உண்மை இருப்பு மற்றும் வித்தியாசம் காணப்பட்ட விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் காணப்பட்ட 84 உரக் கடைகளின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகை பராமரிக்காத 6 உரக் கடைகள் மீது எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.கணக்கில் வராத கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள உரக்கடை உரிமையாளர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மானிய உரங்களை விற்பனை முனைய கருவியில் பட்டியலிடப்பட்டு விற்பனை செய்யாத ஒரு உரக்கடை மீது mFMS குறியீட்டு எண் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் வழிகாட்டுதல் முறைகளின்படி உரங்களை விற்பனை முனைய கருவியின் மூலம் விவசாயியின் ஆதார் எண்ணையும் பயன்படுத்தி உரக்கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். நிர்ணயம் செய்த விற்பனை விலையில் மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாமல் உர விற்பனை செய்யும் உரக்கடை உரிமையாளர்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் 1955 மற்றும் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட உரக்கடைகள் வேளாண்மைத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

Tags :

Share via