தாறுமாறாக ஓடிய கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த பரிதாபம்

by Editor / 13-10-2021 10:21:55am
தாறுமாறாக ஓடிய கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த பரிதாபம்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகள் கனிஷ்கா அருகில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மற்றொரு மகள் அஸ்விதா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இருவருமே காலை வழக்கம்போல காரில் பள்ளிக்கு புறப்பட்டனர். அவருடைய உறவினர் நாகராஜன் என்பவர் இரண்டு பேரையும் பள்ளிக்கு காரில் அழைத்துச் சென்றார்.

அப்போது சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென பாலத்தின் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கனிஷ்கா மற்றும் காரை ஓட்டி சென்ற உறவினர் ஆகிய 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

பின்னர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஸ்விதாவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிஷ்கா மற்றும் நாகராஜன் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via