தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் ரஜினி

by Editor / 24-10-2021 07:08:27pm
தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த்  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள் இருக்கிறது. ஒன்று மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது. 2வது என்னுடைய மகள் சவுந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ‘HOOTE’ என்கின்ற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் ‘HOOTE APP’ மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான ‘HOOTE APP’-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற டெல்லிக்கு பயணம் செய்வதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அப்போது பாலசந்தர் சார் இல்லாதது வருத்தம் என தெரிவித்தார்.இந்திய திரையுலகினருக் மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்தநாள் நூற்றாண்டான 1969ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.

2019ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. இதற்கு பல்வேறு திரையுலகினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது.தற்போது டெல்லியில் நாளை (25 ந்தேதி) தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லிக்கு இன்று ரஜினிகாந்த் பயணம் மேற்கொண்டார்.இதற்கு முன்பாக தனது இல்லத்தில் விருது கிடைத்து இருப்பது பற்றி ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-தாதா சாகேப் பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. இந்த விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என தெரிவித்தார்.விழாவில் தங்கத்தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது.நாளை நடைபெறும் விழாவில் 2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இதில் ’அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ், ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகர், பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’ஒத்த செருப்பு’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது, ‘கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, இசையமைப்பாளர் டி.இமானுக்கு, ’விஸ்வாசம்’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது ஆகியவையும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via