கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் மக்கள் அவதி
விடிய விடிய பெய்த கனமழையால், திருவொற்றியூரில், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வட சென்னை திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில், நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மணலி விரைவு சாலை, சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், முருகப்பா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .
இதேபோன்று, கார்கில் நகர், வெற்றி நகர், சார்லஸ் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tags :