மண்டல பூஜை நாளையுடன் நிறைவு:சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி மகா தீபாராதனை.

by Editor / 25-12-2021 08:55:01am
மண்டல பூஜை நாளையுடன் நிறைவு:சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி மகா தீபாராதனை.

சபரிமலையில் மண்டல பூஜையையொட்டி ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி மகா தீபாராதனை காட்டும் நிகழ்வு இன்று மாலை நடைபெறவுள்ளது.

சபரிமலையில் இன்று மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மதியம் மண்டல பூஜை நடக்கிறது.2021- மண்டல காலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 

மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி இன்று காலை ராந்நி பெருநாடு சாஸ்தா கோயிலிலிருந்து புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும்.
பம்பையில் பக்தர்கள் தரிசனத்துக்கு பின்னர் மாலை 3:00 மணிக்கு தலை சுமடு மூலம் சன்னிதானத்திற்கு கொண்டுவரப்படும்.ஐயப்பா சேவா சங்க கேரள மாநில துணைத் தலைவர் ஹரி தாசன் நாயர் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினர் அங்கியை சுமந்து வருகின்றனர்.

மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்து அழைத்து வருவர்.கோயில் முன்பு வந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி அங்கியை பெற்று நடை அடைத்த பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெறும்.

நாளை மதியம் 1:15 மணிக்குள் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறும். மதியம் நடை அடைத்த பின்னர் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை,அத்தாழ பூஜைக்குப் பின்னர் இரவு 9:50 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுவதுடன் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் நிறைவுபெறும்.

 

Tags :

Share via