கஞ்சா போதையில் குத்தி கொலை... ஷேர் ஆட்டோ ஓட்டுநர் கைது...

by Admin / 26-12-2021 11:22:39am
கஞ்சா போதையில் குத்தி கொலை... ஷேர் ஆட்டோ ஓட்டுநர் கைது...

 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியகொமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா இவரது கணவர் கோவிந்தராஜ் வீரகோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.  

அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்  என்பவர் ஷேர் ஆட்டோ  ஓட்டுநராக உள்ளார். இவர் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாகளை வாங்கி கொண்டு வந்து ஆட்டோக்களில் வைத்து ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அன்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்த வெங்கடேசனை ஆம்பூர் நகர காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்து அவரிடம் இருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த வெங்கடேசன் மீண்டும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் கஞ்சா விற்கவில்லை என்று கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று  காவல் நிலையத்தில் வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாம் கஞ்சா விற்பதில்லை என சான்றிதழ் வழங்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனாவை தொடர்புகொண்ட நிலையில் அவர், மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், அவரது கணவர் கோவிந்தராஜை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கஞ்சா விவகாரத்தில் மேலும் ஒரு கொலை சம்பவம் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via