30 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்குகள்

by Admin / 04-02-2022 12:00:52pm
30 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்குகள்


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவாமூர் கிராமம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமாத்மா. அவரது மனைவி ஆனந்தி இவர்கள் ஆடு வளர்க்கும் தொழில் செய்கின்றனர்.
 
இவர்களுக்கு சொந்தமாக 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளது. நேற்று வழக்கமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பின்பு இரவு 10 மணி அளவில் பட்டியில் அடைத்தனர். 

இரவு 11 மணி அளவில் பட்டியில் இருந்த ஆடுகள் கத்தியது. அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவியும் ஆடுகள் அடைக்கப்பட்டு இருந்த பட்டிக்கு சென்றனர். அப்போது 30 ஆடுகள் இறந்து கிடந்தது கண்டு பதறிபோனார்கள். இந்த ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்துகொன்று உள்ளது.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு செட்டிபாளையம் கால்நடை டாக்டரை வரவழைத்து ஆடுகள் இறப்பு குறித்து கேட்டறிந்தனர்.

 

Tags :

Share via