கேரளாவில்அதிர்ச்சி :கொரோனா நோயாளிக்கு  பாலியல் துன்புறுத்தல்

by Editor / 16-05-2021 04:50:53pm
கேரளாவில்அதிர்ச்சி :கொரோனா நோயாளிக்கு  பாலியல் துன்புறுத்தல்


ஆம்புலன்ஸில் ஊழியரால் பெண் கொரோனா நோயாளிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் சிலர் மருத்துவமனைகளிலும், பிற இடங்களிலும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை அனுபவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த உதவியாளர் பெண் நோயாளிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நிலை மோசமடைந்தது, இதனையடுத்து சீரியசான நிலையில் இருந்த அப்பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்காக ஏப்ரல் 27ம் தேதியன்று ஸ்கேன் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசாந்த் ( 33) என்பவர் அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது.
அப்பெண் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அப்போது அவரால் இது குறித்து புகார் அளிக்க இயலவில்லை, தற்போது அவர் குணமடைந்திருக்கும் நிலையில் மே 13ம் தேதி தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து மருத்துவரிடம் தெரிவித்த நிலையில் இது குறித்து காவல்நிலையத்திலும் அவர் புகார் அளித்திருக்கிறார். 
அதனையடுத்து ஆம்புலன்ஸ் உதவியாளர் பிரசாந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக கேரளாவில் கடந்த ஆண்டு பத்தனம்திட்டா மாவட்டத்தின் ஆரன்முல்லா பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் இளம் பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது வழியில் தனியான இடத்தில் வைத்து அவரை 29 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் வன்புணர்வு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via