மலையாள நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச்சூடு
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லீனா மரியா பால். சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். பனம்பிள்ளி நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 2018 டிசம்பர் 15ம் தேதி பைக்கில் வந்த 2 பேர் பியூட்டி பார்லர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது மும்பை நிழல் உலக தாதாவான ரவி பூஜாரி தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக பெங்களூர் போலீசார் ரவி பூஜாரியை கைது செய்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பியூட்டி பார்லர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு அனுமதி கோரி பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து வரும் 8-ம் தேதி வரை ரவி பூஜாரியை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி பெங்களூரு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை ரவி பூஜாரி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :