ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

by Editor / 30-09-2022 08:26:48pm
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது இந்து அமைப்பினர், பாஜக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்திருந்தது.

சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு அனுமதி தர இயலாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் சமீபத்தில் நடந்து வரும் நிகழ்வுகள், சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், முன்னெச்சரிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதில் மாற்று தேதி அறிவித்து பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு தடை செய்யப்பட்ட போதும் கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் கடைசி நேரத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், மத்திய, மாநில உளவு அமைப்புகளின் எச்சரிக்கையை அடுத்து அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் அனுமதி வழங்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் இந்த வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Tags :

Share via