விவசாயிகள், மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை

by Staff / 07-10-2022 05:54:10pm
விவசாயிகள், மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 காட்டு யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தது. இந்நிலையில் வனத்துறையினர் அந்த யானை கூட்டங்களை மதுக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர், இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி விவசாயிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர், இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தேவராயபுரம், வண்டிக்காரன்புதூர், விராலியூர், தாளியூர் கிராமங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு தாளியூர் பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அடுத்தடுத்து மூன்று தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தக்காளி, கீரை ஆகிய பயிர்களை சேதப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நாகராஜ் என்பவரது தோட்டத்திற்கு புகுந்த யானை அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்திவிட்டு வெளியே வர முயன்றது. அப்போது தோட்டத்தை சுற்றியும் சோலார் மின் வேலிகள் அமைக்கப்பட்டு இருந்ததால், அங்கிருந்த இரும்பு கதவை உடைத்துக் கொண்டு யானை வெளியே வந்தது இதை அடுத்து நரசிபுரம் சாலையில் நடந்து சென்று வனப்பகுதிக்குள் புகுந்தது. ஒற்றைக் காட்டு யானை இரும்பு கதவை உடைத்துக் கொண்டு வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனிடையே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும், வனத்துறை ஊழியர்கள் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென விவசாயிகள் இன்று தொண்டாமுத்தூர் பகுதியில், வனத்துறை அதிகாரிகளுக்கு, கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via