பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 20 பயணிகள் காயம்

by Staff / 20-10-2022 12:02:23pm
பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 20 பயணிகள் காயம்

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று மதுரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. உடனடியாக அந்த பேருந்தின் ஓட்டுநர் நிறுத்த முயன்று பிரேக் பிடித்துள்ளார். அப்போது கனமழை காரணமாக பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்து நிற்காமல் இழுத்துச் சென்று எதிரே ராமேஸ்வரம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பாம்பன் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via