குளோரின் கசிவு; 3 பேருக்கு மூச்சுத் திணறல்
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாயு கசிவு காரணமாக பலர் வீடுகளை விட்டு தற்காலிகமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த போபால் கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, குளோரின் வாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 900 கிலோ எடையுள்ள குளோரின் வாயு உருளையின் முனையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கசிவு ஏற்பட்டதை நகராட்சி குழு கண்டறிந்தது. அதன் பிறகு, சிலிண்டர் தண்ணீரில் ஐந்து கிலோ காஸ்டிக் சோடாவை சேர்த்து நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக 3 பேர் ஹமிடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஆபத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. போபால் வாயு பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சர் விஸ்வாஸ் சாரங் மற்றும் போபால் மேயர் மால்தி ராய் ஆகியோர் ஹமீடியா மருத்துவமனைக்கு சென்று அவர்களின் உடல்நிலையை அறிந்து கொண்டனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :