திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி

by Editor / 10-12-2022 08:17:13pm
திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து 61 கிமீ தூர ரயில் பாதை அமைந்துள்ளது.  சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு ஏழு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரிலிருந்து இந்த ஏழு ரயில்கள் பல்வேறு பகுதிக்கு செல்கின்றன. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் 70 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இந்த பகுதியில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.  ரயில் வேக சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது. இதையடுத்து திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே பிரிவில் ரயில்களை 110 கிமீ வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த பகுதியில் ரயில்கள் 110 கிமீ வேகத்தில் இயக்கப்படும். மேலும் செங்கோட்டை - கொல்லம், திண்டுக்கல் - பழனி - பொள்ளாச்சி, மதுரை - விருதுநகர் ஆகிய ரயில் பிரிவுகளில் ரயில் நிலையங்களில் ரயில்கள் நேரடி ரயில் பாதையில்  (Main line) இருந்து அருகில் உள்ள ரயில் பாதையில் (Loop line) பயணிக்கும் போது இதுவரை 15 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது. இதுவும் தற்போது இந்தப் பகுதிகளில் 30 கிமீ வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களை வேகமாக இயக்குவதால் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via