இடைத்தேர்தல் : திமுக மற்றும் நாம்தமிழர் கட்சியினரிடையே மோதல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மண்டை உடைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு,தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 80 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இருப்பினும் ஈரோடு இடைத் தேர்தலில் முக்கிய 4 அரசியல் கட்சிகளுக்கிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.இந்த இடைத்தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆம் ஆண்டை நெருங்கியுள்ள நேரத்தில் வந்துள்ளதால் இந்த தொகுதியில் பதிவாகும் வாக்குகள் வரும் பாராளுமன்றத்தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளதால் அனைத்து கட்சியினரும் முனைப்புடன் களம் காணுகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு ராஜாஜிபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின்
தொழிற்சங்கத்தை சார்ந்த அன்பு தென்னரசுவின் மண்டை உடைக்கப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் அங்கு கூடி அன்பு தென்னரசுவை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலடியாக சீமானை கைது செய்ய கோரியும் திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டை உடைக்கப்பட்ட அன்பு தென்னரசு அரசு மரூத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :