தவறான பழக்கத்தால் வாலிபர் வெட்டிக்கொலை…

by Staff / 17-04-2023 03:23:30pm
தவறான பழக்கத்தால் வாலிபர் வெட்டிக்கொலை…

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை சேர்ந்தவர் ராசாத்தி (38). இவரது கணவர் திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த முருகேசன் (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறினால் 2 மகன்களுடன் ராசாத்தி அன்னவாசலில் கடந்த சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், அன்னவாசலை சேர்ந்த முத்துக்குமாருக்கும் (30), ராசாத்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராசாத்தியின் மூத்த மகன் வெற்றிவேல் (17), கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், வெற்றிவேல் இறப்புக்கு முத்துக்குமார் தான் காரணம் எனக் கருதிய, முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் முத்துக்குமார் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் முத்துக்குமாரை அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை கொண்டு வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்குமாரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கு வந்த அன்னவாசல் போலீசார் முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முருகேசன் மற்றும் அவரது உறவினர்களான அன்னவாசலை சேர்ந்த சண்முகம் (35) நாகராஜ் (29) உட்பட 7 பேர் மீது அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வாலிபர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via