மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி

by Staff / 29-05-2023 02:17:29pm
மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தின்னனூர் நாடு ஊராட்சி, பெரிய சோளக்கண்ணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 47). இவருடைய மனைவி செல்வி (42). இவர்களுக்கு யஸ்வந்த் (6) என்ற மகன் உள்ளான். சேந்தமங்கலம் அருகே உள்ள பழையபாளையத்தில் இருந்து கோம்பை செல்லும் பாதையில் சிவபாரதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் மனோகரன் குடும்பத்துடன் தங்கி குத்தகைக்கு வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று கணவன், மனைவி 2 பேரும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றனர். மோட்டார் அறைக்கு சென்ற மனோகரன் சுவிட்சை போட்டார். அப்போது திடீரென்று அவரை மின்சாரம் தாக்கியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி செல்வி, ஓடி வந்து கணவரை காப்பாற்ற சென்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் மனோகரன், செல்வி இருவரும் அலறி துடித்தபடி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இதனிடையே பெற்றோரின் அபயக்குரலை கேட்டு அவர்களது மகன் யஸ்வந்த் சத்தம் போட்டான். அவனது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணவன், மனைவி 2 பேரின் உடலையும் கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via