அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை விசாரணை.

by Editor / 10-09-2023 09:30:09am
 அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை விசாரணை.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர்  செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.

இதுதொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தான், ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அமைச்சர்  செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு நாளை திங்கள் கிழமை ((செப்டம்பர் 11ம் தேதி)) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Tags : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு

Share via