ரயிலில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு.

by Editor / 18-12-2023 10:27:27pm
 ரயிலில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் டிசம்பர் 17 காலை 08.30  மணி முதல் டிசம்பர் 18 காலை 08.30 மணி வரை முறையே 932 மி.மீ.,  670 மி.மீ. எதிர்பாராத மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் சரளை கற்களை வெள்ள நீர் அடித்து சென்றுள்ளது. எனவே ரயில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தாழையூத்து - கங்கைகொண்டான் ரயில் பிரிவில் 7.71 கி.மீ. ரயில் பாதை வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணரிப்பு மற்றும் சரண கற்கள் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டுள்ளது. நைனார் குளம் நிரம்பி வழிவதால் திருநெல்வேலி ரயில் நிலையம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதிக மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதைக்கு மேல் ஒரு மீட்டர் அளவிற்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை - மேல விட்டான் ரயில் நிலையங்களுக்கிடையே  7.47 கி.மீ தூர ரயில் பாதையில் உள்ள 9 நீர்வழிப் பாலங்களில் அபாயகர அளவில் வெள்ளநீர் சென்று கொண்டிருக்கிறது. திருநெல்வேலி அருகே உள்ள செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே 12.16 கி.மீ தூரத்திற்கு பாதையில் சரளை கற்கள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டுள்ளது. மழை நின்று வெள்ள நீர் குறைந்தவுடன் சீரமைப்பு பணிகள் துவங்க இருக்கிறது. இதற்காக ரயில்வே பொறியியல் பிரிவு தேவையான ஊழியர்கள் மற்றும் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் - செய்துங்கநல்லூர் ரயில் பாதையில் திடீர்  பாதிப்பு ஏற்பட்டதால் டிசம்பர் 17 அன்று இரவு 08.25 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் 33 கிமீ பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரவு 09.19 மணிக்கு நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் டிசம்பர் 18 அன்று அதிகாலை மணிக்கு 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அழைத்துச் சென்று அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.  வழியில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க இயலாமல் போனது. உடனடியாக தூத்துக்குடி இல் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டது அந்த குழுவும் சாலையில் ஏற்பட்ட பல்வேறு உடைப்புகள் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் சென்று சேர முடியவில்லை. ரயில்வே நிர்வாகத்தின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க மீட்பு பணிகளுக்கு செல்ல தயாராக இருந்த தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்கள்  அதிக மழை, வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் சென்று சேர முடியவில்லை. மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உதவியுடன் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. ரயிலில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான 2 டன் நிவாரணப் பொருட்களுடன் ஹெலிகாப்டர் ஒன்று கோவை மாவட்டம் சூலூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழை மற்றும் சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக பயணிகளை வெளியேற்றுவதில் சிரமம் நீடிக்கிறது. எனவே அவர்கள் ரயில் பெட்டிகளிலும் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பாக தங்குவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்காக போதிய மின் விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை ரயில் நிலையத்தில் போதுமான அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணிகளை மீட்பது சிரமம் என்பதால் டிசம்பர் 19 அன்று பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு சாலை வாகனங்கள் மூலம் அருகில் உள்ள பெரிய ரயில்களை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : ரயிலில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு.

Share via