குரூப் 4 தேர்வு  தமிழ் பாட வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து 

by Editor / 10-06-2024 12:40:48am
குரூப் 4 தேர்வு  தமிழ் பாட வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து 


தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.  அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர்,  வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர்,  தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு நேற்று  நடைபெற்றது.  இந்த தேர்வு நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.  6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும், இத்தேர்வை சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்டோர்  எழுதுகின்றனர்.

இந்த நிலையில்,  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இந்த ஆண்டு முதல் முறையாக ‘ இன்வேலிட் (Invalid) மதிப்பெண்’  அறிவிக்கப்பட்டுள்ளது.   அதாவது, பதில்களை தேர்வு செய்யும் முறையில் ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்துவிட்டு,  அதை அடித்து பின்னர் வேறொரு பதிலை பதிவிட்டால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும்.

ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்படும் A, B, C, D , E ஆப்சன்களில் D வரையான ஆப்ஷனில் பதில் எது என்று தெரியவில்லை என்றால் E என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் என்றும்  கட்டாயம் ஏதாவது ஒரு கட்டத்தை நிரப்பி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்ஷன்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால்,  E ஆப்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் மதிப்பெண் இன்வெலிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குரூப் 4 தேர்வினை தமிழகம் முழுவதும் 20,36,774 பேர் எழுதினர். இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வினை எழுதிய மாணவர்கள் அனைத்து வினாக்களும் சுலபமாக இருந்ததாகவும், தமிழ் மொழி வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர், 

 

Tags : குரூப் 4 தேர்வு  தமிழ் பாட வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து 

Share via