கள்ளக்குறிச்சியில் 13 பேர் உயிரிழந்த விவகாரம்:வழக்கை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

by Editor / 20-06-2024 01:07:49am
கள்ளக்குறிச்சியில் 13 பேர் உயிரிழந்த விவகாரம்:வழக்கை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள்  (19-6-2024) வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் பிரவீன்குமார். வயது 26, த/பெ. கணேசன் நேற்று அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், சுரேஷ், வயது 40 த/பெ. தர்மன் மற்றும் சேகர், வயது 59, த/பெ கந்தன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி
இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள், உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம், உடல் கூராய்விற்குப் பின்பு தெரியவரும்.

மேற்கண்ட 26 நபர்களில், வடிவு,, கந்தன் , ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் சிலர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 13 -ஆக உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கோவிந்தராவ், இ.ஆ.ப., மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.

மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி, வயது 49, த/பெ. கனகு என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன், உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  ஷ்ரவன்குமார் ஜடாவத், இ.ஆ.ப., உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள், புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக CBCID வசம் ஒப்படைக்கவும் ஆணையிட்டுள்ளார்

 

Tags : கள்ளக்குறிச்சியில் 13 பேர் உயிரிழந்த விவகாரம்:வழக்கை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Share via