ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம்: என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை
சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்தவர் ஹரி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 27). இவர், என்ஜினீயரிங் படித்துவிட்டு ஆன்லைன் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைன் வியாபாரத்தில் ரூ. 5 லட்சம் வரை நஷ்டம் அடைந்ததாகவும், இதனால் அவர் மனமுடைந்து இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கார்த்திகேயன் அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றார். அதன்பிறகு அவர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயனின் குடும்பத்தினர் அவரது அறையில் எட்டி பார்த்தனர். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :