தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி - தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை.

by Editor / 26-09-2024 04:09:22pm
தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி - தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை அதிவிரைவு ரயிலானது கடையநல்லூர் -பாம்பு கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, திடீரென அதிபயங்கர சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

இந்த நிலையில், சற்றுத் தொலைவில், ரயிலை நிறுத்திய ரயிலின் ஓட்டுனர் எதன் காரணமாக சத்தம் வந்தது? என ஆய்வு செய்தபோது தண்டவாளத்தில் இரண்டு பெரிய அளவிலான கற்கள் இருந்ததும், அது ரயிலின் முன் பகுதியில் சேதத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

 அதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக ரயிலின் ஓட்டுனர் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ரயில்வே போலீசார் மற்றும் புளியங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.

 அப்போது, சுமார்10 கிலோ மதிக்கத்தக்க இரண்டு பெரிய அளவிலான கற்கள் தண்டவாளத்தில் இருந்தது தெரிய வரவே, அதனை அப்புறப்படுத்திய போலீசார் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயில்களை கவிழ்க்க சதி செய்தது யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம், அந்த பகுதியில் மாற்று உடையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட காவல்துறை உயரதிகாரிகள் உத்தர பிறப்பித்துள்ள நிலையில், தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி - தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை.

Share via