மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அரிய வகை பச்சோந்தி, கருங்குரங்குகள்-2 பேர் கைது.

by Editor / 17-10-2024 10:08:48am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அரிய வகை பச்சோந்தி, கருங்குரங்குகள்-2 பேர் கைது.

மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது மலேசியாவிலிருந்து, பெண் ஒருவர் சுற்றுலாப் பயணியாக அந்த விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளார்.

மேலும், அவர் 2 பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகள் வைத்திருந்துள்ளார். அந்த கூடைகளில் என்ன இருக்கிறது? என்று சுங்க அதிகாரிகள் கேட்டபோது, சரியான பதில் கூறாமல், மாறி மாறி பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயணியை நிறுத்தி, அவர் வைத்திருந்த கூடைகளை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது,அந்த கூடைகளில்  ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள் 52, ஜியாமங்க் ஜிப்பான் என்ற ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் 4 இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த மலேசிய பெண் பயணியை வெளியில் விடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் விரைந்து வந்த அதிகாரிகள், மலேசியப் பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர். அதோடு அவர் கடத்திக் கொண்டு வந்த உயிரினங்களையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே, பெண் பயணி கொண்டு வந்த அபூர்வ உயிரினங்களை வாங்கி செல்வதற்காக, சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண், விமான நிலையத்தின் வெளியே காத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரையும் கைது செய்தனர்.

மேலும், இவை அனைத்துமே ஆப்பிரிக்க வனப்பகுதியில் காணப்படும் உயிரினங்கள். இவை பல்வேறு நோய்க்கிருமிகளுடன் இருக்கக் கூடியவை. இந்த உயிரினங்களை, நமது நாட்டுக்குள் அனுமதித்தால், பல்வேறு நோய்க்கிருமிகள், மனிதர்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்றவைகளுக்கு பரவிவிடும். இவைகள் மிகவும் ஆபத்தானவை. என்று கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து. 

சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று அதிகாலை சென்னையிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்ற தனியார் பயணிகள் விமானத்தில், இந்த 56 உயிரினங்களையும், மலேசிய நாட்டிற்கே திருப்பி அனுப்பினர்.

அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இருவரையும் சென்னை சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். 
 

 

Tags : மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அரிய வகை பச்சோந்தி, கருங்குரங்குகள்-2 பேர் கைது.

Share via