பயங்கரவாதத்தின் மூலம் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும்: பிரதமர் மோடி
பயங்கரவாதத்தின் மூலம் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். மனிதகுலத்தை ஒடுக்க முடியாது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், தலீபான்கள் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்குமா? என்பதுதான் தற்போதைய பேசுபொருளாக சர்வதேச அளவில் உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் சில திட்டங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி பேசுகையில்,
அழிவு சக்திகள் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் பேரரசுகளை உருவாக்கும் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் எனவும் அவர்களால் மனிதகுலத்தை ஒடுக்க முடியாது. சோம்நாத் ஆலயம் பல முறை இடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் சிலைகள் பல முறை சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதை இருந்த இடம் தெரியாமல் அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகும் அது மீண்டெழுக்கப்பட்டுள்ளது. இது நமக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. அழிவை நோக்கி அழைத்து செல்லும் சக்திகளும் பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களும் சில காலத்திற்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால், மானுடத்தை அவர்களால் ஒடுக்கிவிட முடியாது. அவர்களின் இருப்பு நிரந்தரமானது அல்ல” என்றார்.
Tags :