அரசு பேருந்து கார் மோதியதில் பள்ளி தாளாளர் பலி

மதுரை மாவட்டம் கள்ளிகுடி தாலுகா விருதுநகர் மாவட்ட எல்லை அருகே வி.டி.மணிநகரம் பகுதியில் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்றை தங்கராஜ் (58) என்பவர் பள்ளித்தாளாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 2) இரவு தங்கராஜ் அவரது மனைவி வெங்கடேஸ்வரியுடன் விருதுநகர் சென்று விட்டு இரவு 8:20 மணியளவில் மணிநகரம் அருகே உள்ள தனது வீட்டுக்கு காரை டிரைவர் அருண்குமார் ஓட்டி வந்துள்ளார். மதுரை விருதுநகர் சாலையில் மணிநகருக்கு டிரைவர் காரை திருப்ப முயன்றபோது மதுரையிலிருந்து நெல்லைக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து கார் மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளித்தாளாளர் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த வெங்கடேஸ்வரி (55), டிரைவர் அருண்குமார், பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக மதுரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சுமார் 3 கிலோமீட்டருக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
Tags :