அதிமுகவை ஒருங்கிணைக்க நினைத்தவர் கருப்பசாமிபாண்டியன் - ஓ.பி.எஸ். புகழாரம்
நெல்லையில் மறைந்த அதிமுக அமைப்புச் செயலர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர் கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதிமுகவை மிகப் பெரிய பேரியக்கமாக உருவாக்குவதற்கு இதயபூர்வமாக உழைத்தவர். அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். எந்தச் சூழலிலும் உதவி என்று யார் தன்னை நாடி வந்தாலும் மனமாச்சார்யம் இல்லாமல் உதவியவர். அனைத்து தரப்பினருக்காகவும் உழைத்தவர். பொதுச் சேவையை நிறைவாக செய்தவர். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1982ல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது அவர் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது. அவருடைய ஆன்மா இறைவன் திருவடியில் அமைதியில் திளைக்கட்டும். பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருப்பசாமி பாண்டியன். அதிமுக தொண்டர்களின் எண்ணமும் அதுதான். அதற்கு எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும்.
Tags : அதிமுகவை ஒருங்கிணைக்க நினைத்தவர் கருப்பசாமிபாண்டியன் - ஓ.பி.எஸ். புகழாரம்



















