பெண்ணின் கர்ப்பபையில் 3 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

by Admin / 28-08-2021 01:37:47pm
பெண்ணின் கர்ப்பபையில் 3 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழங்குடியின பெண்ணுக்கு கர்ப்பபையில் 2 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தொமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான ரவியின் மனைவி லட்சுமி. இவர் கடந்த ஓராண்டாக அடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததோடு, மாத விலக்கின் போது ரத்த போக்கும் அதிகமாக இருந்துள்ளது. இதனால் லட்சுமி மிகவும் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இம்மாதம் 8}ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, உடல் பரசோதனை செய்த போது ரத்த கட்டியும் இருந்ததோடு, கர்ப்பபையில் கட்டி வளர்ந்திருப்பதும் தெரியவந்தது.


பின்னர் லட்சுமிக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவக்குழு முடிவு செய்தது. அதன்பேரில்  மருத்துவமனையின் முதல்வர் (டீன்) அரசி ஸ்ரீவத்சன் தலைமையில் மருத்துவர்கள் வைரமாலா, மணிலட்சுமி ஆகியோர் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணின் கர்ப்பபையிலிருந்து 3 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை செய்தனர். தற்போது, அப்பெண் நலமாக படுக்கையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via