"விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை" - முதலமைச்சர்
விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். புதுச்சேரி, கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மட்டுமே அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும், இல்லங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கொண்டாடலாம் என்றும், விளக்கம் அளித்தார்.மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலை தயாரிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
Tags :