அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக: தனித்து போட்டி

by Editor / 15-09-2021 03:01:44pm
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக: தனித்து போட்டி

கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாமக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளதால் அதிமுக – பாமக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இதனை அடுத்து அரசியல் கட்சிகள் குறிப்பாக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான பாமக திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்து பாமக தலைவர் ஜிகே மணி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கக் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், எனது தலைமையில், இணைய வழியில் இன்று மாலை நடைபெற்றதுm 

அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து நாளையும், நாளை மறுநாளும் ( செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் நாட்கள்) விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.இவ்வாறு ஜிகே மணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  •  
 

Tags :

Share via