சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய்-மகள் திடீர் மரணம்

by Editor / 13-10-2021 05:25:30pm
சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய்-மகள் திடீர் மரணம்

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  தங்கப்பநகரை சேர்ந்தவர் இளங்கோவன். லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகம் (33). இந்த தம்பதியரின் மகள் தர்ஷினி (7). செவ்வாய்  இரவு கடலையூர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வீட்டில் வைத்து தாயும் - மகளும் சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்த மாங்கோ ஜூஸ் குளிர்பானத்தை அருந்தியுள்ளனர்.


இதையடுத்து இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிறிது நேரத்திற்குள் இருவரது உடல் நிலை மோசமடைந்தது, தாயும் மகளும் உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து தங்கப்பன் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆன்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தினர்.


உயிரிழந்த இருவரது உடல்களும் உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கையின் முடிவில் தாய் - மகள் மரணத்திற்கான காரணம் தெரியவரும். மேலும், இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via