குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா

by Editor / 14-11-2021 10:03:03pm
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா

இந்திய ரயில்வேயில் 143 ரயில் நிலையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மதுரை கோட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற ரயில் நிலையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் வீட்டுக்கு தெரியாமல் தப்பி வரும் குழந்தைகள், காணாமல் போகும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் ஆகியோரை மீட்டு காப்பாற்றுவதற்காக ரயில் நிலையங்களில் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 என்ற எண்ணும் செயல்பட்டு வருகிறது. இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மதுரை ரயில் நிலையத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா ஞாயிற்றுக்கிழமை (14.11.2021) அன்று துவங்கியது.  இந்த வார விழாவை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார பலகையிலும் கையெழுத்திட்டார். குழந்தைகளின் கையில் விழிப்புணர்வு பட்டையையும்  அணிவித்தார். விழாவில் நிலைய இயக்குனர் மற்றும் கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், காப்பக ஒருங்கிணைப்பாளர் அனிதா, துணை நிலைய மேலாளர்கள் பிரபாகர், விஜய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via