ஆடு திருடி சென்ற கும்பலை விரட்டிச் சென்ற, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை -முதல்வர் இரங்கல்

திருச்சி அருகே ஆடு திருடிசென்ற கும்பலை விரட்டிச் சென்ற, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.அவரது படுகொலை சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பூலாங்குடி காலனியில் ரோந்துப் பணியிலும் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும்போது அவர் துரத்திப் பிடித்துள்ளார். இச்சம்பவத்தின்போது அந்த நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறையின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.சிறப்பு உதவி ஆய்வாளர் ரோந்துப் பணியிலிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன்.
இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :