தளர்வுகளை தவறாக பயன்படுத்துவோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்க  உயர் நீதிமன்றம் உத்தரவு

by Editor / 09-06-2021 04:27:29pm
தளர்வுகளை தவறாக பயன்படுத்துவோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்க  உயர் நீதிமன்றம் உத்தரவு



கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தெரு விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் தவிப்பதாகவும் அவைகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் விலங்குகள் நல ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தெரு விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை 3 வாரகாலத்திற்கு ஒத்திவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பலரும் வெளியே சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. முறையான காரணம் இல்லாமல் வெளியே வருவோர்மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினர்.
மேலும் தற்போது இயல்புநிலை திரும்பியதுபோன்று காட்சியளிக்கிறது. ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது; முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை. இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை. எனவே இதுகுறித்து ஒலிப்பெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறித்தினார்.அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், கொரோனா முதல் அலையின்போது காவல்துறை கடுமையாக நடந்துகொண்டதால் பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே பல பிரச்னைகள் உருவானது. எனவே இந்தமுறை காவல்துறை கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளதால், பொதுமக்கள் இயல்பாக வெளியே வருவதாகக் கூறினார்.
ஆனால் இதனை ஏற்கமறுத்த நீதிபதிகள், மக்களின் அசௌகரியங்களைப் போக்கத்தான் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதே தவிர, மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க முழு நடவடிக்கையையும் அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

 

Tags :

Share via