முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நானும் சந்தித்ததாகக் கூறுவதை இபிஎஸ் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஓபிஎஸ் சவால்!

by Staff / 20-10-2022 02:10:41pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நானும் சந்தித்ததாகக் கூறுவதை இபிஎஸ்  நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஓபிஎஸ் சவால்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நானும் சந்தித்ததாகக் கூறுவதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை முடிந்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அரை மணி நேரம் பேசினார் என எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு 12.45 மணியளவில் வந்தடைந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.

அதிமுக தொண்டர்கள் இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினார். அம்மாவும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக 30 ஆண்டுகாலம் கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று பல தியாகங்களை இந்த இயக்கத்திற்காக செய்துள்ளார். இந்த 50ஆம் ஆண்டு திருநாளை தொண்டர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால் விரும்பத்தகாத பிரச்சனைகளை யார் உருவாக்கினார்கள் என்பது நாட்டு மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும்.

பொதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார் என்றும் நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்பதை நாட்டு மக்களுக்கு அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வளவு பெரிய செயலை பாவத்தை செய்துவிட்டு அடுத்தவர்கள் மீது படுவது என்பது ஏற்புடையது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். என்னைப் பற்றி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும் தொண்டர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 1 மணி நேரம் பேசியதாக கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டு உள்ளனர். முதலமைச்சரை நான் சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலக தயார். நிரூபிக்க வில்லை என்றால் பழனிசாமி விலக தயாரா? என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

 

Tags :

Share via