உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வந்த திமுக தொண்டர்களிடையே அடிதடி.
சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உலக மீனவர் தினத்தை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சியிலும், புத்தளத்தில் கட்சி அலுவலகம் திறப்பு விழாவிலும், இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி வந்தார். அவருக்கு காவல்கிணறு ஜங்ஷனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்து அங்கு ஓய்வெடுப்பதற்காக தனது அறைக்கு சென்றார். அப்போது திமுக முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், முன்னாள் எம்பி ஹெலன்டேவிட்சன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒரு சில தொண்டர்கள் உள்ளே விடாமல் கதவை பூட்டினர். இதனால் திமுக இளைஞரணி தொண்டர்களுக்கும், திமுக தொண்டர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அது அடிதடியாக மாறி ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் தாக்கினர். பின்னர் செல்போனை பிடுங்கி உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
Tags :