நீரில் மூழ்கி 3 பெண்கள் பலி:ஒருவரது  உடலைத்தேடும்பணி தீவிரம்.

by Editor / 12-02-2023 12:48:39pm
நீரில் மூழ்கி 3  பெண்கள்  பலி:ஒருவரது  உடலைத்தேடும்பணி தீவிரம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 64). இவரது உறவினர் சிறுமுகையில் புதிய வீடு வாங்கியுள்ளார். இதன் கிரகப்பிரவேசம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பாக்கியம், அவருடைய மருமகள் ஜமுனா (40), கஸ்தூரி, சகுந்தலா (50) ஆகியோர் நேற்று சிறுமுகையில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை 4 மணிக்கு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பம்ப் ஹவுஸ் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அவர்களுடன், பாலகிருஷ்ணனும் வந்திருந்தார். பாக்கியம் உள்பட 4 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். பாலகிருஷ்ணன் கரையில் நிறுத்தி வைத்திருந்த தனது காரில் அமர்ந்திருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற 4 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களது கூக்குரல் கேட்டு கரையில் இருந்து ஓடி வந்த பாலகிருஷ்ணன் ஆற்றில் குதித்து 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் ஆற்றில் மூழ்கி பாக்கியம், ஜமுனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்று வெள்ளத்தில் சகுந்தலா அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். 

இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பாக்கியம், ஜமுனா ஆகியோரது உடல்களை மீட்டனர். சகுந்தலாவின் உடலை தேடி வந்த நிலையில், இருள் சூழ தொடங்கியதால் அந்த பணியை தீயணைப்பு துறையினர் கைவிட்டனர். இன்று காலையில் மீண்டும் தேடும் பணி நடந்துவருகிறது. 3 பெண்கள் பலியானது குறித்து சிறுமுகை  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த 3 பெண்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via