ரெய்டுகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது: உதயநிதி ஸ்டாலின் கருத்து

by Staff / 29-04-2023 12:51:42pm
ரெய்டுகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது: உதயநிதி ஸ்டாலின் கருத்து

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், திமுக மீதான குற்றச்சாட்டு, அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ, ஐடி ரெய்டு ஆகியவை திமுக மீதான அச்சுறுத்தலா என செய்தியாளர்கள் கேட்டனர்.இதற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி கூறியதாவது: திமுக மீது எப்போதுதான் குற்றச்சாட்டுகள் சொல்லாமல் இருந்தார்கள். குற்றச்சாட்டுகளை தகர்த்தெறிந்துவிட்டு நாங்கள் எங்கள்வேலைகளை செய்து கொண்டேதான் இருப்போம். அண்ணாமலை பேசியதாக நிறைய ஆடியோக்கள் வந்துள்ளதே, அதுபற்றி அவரிடம் கேட்டீர்களா?வருமானவரித் துறை சோதனைஎன்பது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதுவரை யார் மீதாவது குற்றச்சாட்டு கூறியுள்ளார்களா? வழக்கு பதிந்துள்ளார்களா? வழக்குநடைபெற்றுள்ளதா? கைது செய்யப்பட்டுள்ளார்களா? என்பதைக் கூறுங்கள்.
அதேபோல் திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது. நீங்கள் (செய்தியாளர்கள்) பயப்படாமல் இருங்கள். உங்களைத்தான் அச்சுறுத்துகின்றனர். வகுப்பறைபோல் கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்று ஒருவர் கூறுகிறார். நேற்று கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததுபற்றி நீங்கள் யாரும் அவர்களிடம் கேள்வி கேட்கவில்லையே. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Tags :

Share via