ஜூலை 15இல் 100ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சங்கரய்யா

by Editor / 14-07-2021 08:35:10am
ஜூலை 15இல் 100ஆவது பிறந்த நாளை கொண்டாடும்  சங்கரய்யா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான என். சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள் ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ள தோழர் சங்கரய்யா, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மார்‌க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது, இருந்த 36 தலைவர்களில் இவரும் ஒருவர். இவர் 1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மார்‌க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் இருந்துள்ளார்.

இவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தோழர் என். சங்கரய்யா 100வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூலை 15ஆம் தேதி தோழர் என். சங்கரய்யா 100வது பிறந்தநாளையொட்டி கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேரில் வாழ்த்துவதற்காக வருகை தருகிறார். அவருடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களும் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் / பிரமுகர்கள் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை வாழ்த்து தெரிவிக்க உள்ளார்கள். ஏற்கனவே அறிவித்துள்ள படி, கட்சி தோழர்களும், ஆதரவாளர்களும் ஆங்காங்கே தோழர் சங்கரய்யாவின் 100வது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென்றும், நேரடியாக வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்" என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via