மோசமான வானிலை அந்தமான் சென்ற  விமானம் சென்னை திரும்பியது.

by Editor / 03-09-2023 08:35:13pm
 மோசமான வானிலை அந்தமான் சென்ற  விமானம் சென்னை திரும்பியது.

சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து இன்று அதிகாலை அந்தமானுக்கு 156 பயணிகளுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அந்தமானில் மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்தபடி இருந்தது. எனினும், அங்கு வானிலை சீரடையாததால் அந்த விமானம் தரையிறங்க முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து விமானத்தின் தலைமை விமானி, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்த இன்டிகோ பயணிகள் விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பி கொண்டு வரும்படி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, அங்கு தரையிறங்க முடியாமல் தத்தளித்த இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் சென்னை உள்நாட்டு விமான முனையத்துக்கு வந்து தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு விமானநிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இன்று அந்தமான் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த விமானம் நாளை அந்தமான் புறப்பட்டு செல்லும். இதே விமான டிக்கெட்டில் அனைத்து பயணிகளும் நாளை பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஒருசில பயணிகள், இன்று கொல்கத்தா செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கும்படி கூறினர். அவர்களை கொல்கத்தா அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

Tags :  மோசமான வானிலை அந்தமான் சென்ற  விமானம் சென்னை திரும்பியது.

Share via