டிக்கெட் விற்பனையில் ரூ. 90 லட்சம் மோசடி

by Staff / 17-09-2023 02:42:42pm
டிக்கெட் விற்பனையில் ரூ. 90 லட்சம் மோசடி

சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பிரபல சினிமா தியேட்டர் ஒன்று உள்ளது. அதன் பங்குதாரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து புகார் ஒன்று கொடுத்தார். அதில் தியேட்டரில் பணியாற்றிய மேலாளர் கண்ணன் உள்பட சிலர் தியேட்டரில் 'ஹவுஸ்புல்' ஆகாத நாட்களில் ஏற்கனவே விற்பனையான டிக்கெட்களை அதே எண்ணுடன் பொய்யாக மறு டிக்கெட்கள் அச்சடித்துள்ளனர்.

பின்னர் மறு அச்சடிப்பு செய்த டிக்கெட்களுக்கான பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் முறைகேடாக கணக்கு எழுதி அவர்களுடைய சொந்த உபயோகத்திற்கு எடுத்து கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை டிக்கெட்டுகள் மூலம் ரூ. 90 லட்சம் வரை மோசடி செய்து உள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சினிமா தியேட்டர் மேலாளர் கண்ணன் (வயது 39), புக்கிங் ஆபரேட்டர்கள் வெங்கடாசலம் (32), முருகன் (33), ஏழுமலை (26) ஆகியோர் டிக்கெட்களை மறு பிரிண்டு செய்து விற்று ரூ. 90 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via