மதுரை கோட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 6664 ஊழியர்கள் பயன்பெறுகிறார்கள்.

by Editor / 27-08-2024 06:51:52pm
மதுரை கோட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 6664 ஊழியர்கள் பயன்பெறுகிறார்கள்.

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பற்றிய விளக்கம் அளிக்க மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வரராவ் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று நடைபெற்றது. அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு, ஆகஸ்டு 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது, என்றார். மேலும் 01.01.2004 முதல் பணியமர்த்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள் உட்பட 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இந்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் மூலம்  பயனடைவார்கள். இந்த புதிய ஓய்வூதிய திட்டம் 01.4.2025 முதல் அமுலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் உறுதியான ஓய்வூதியம், உறுதியான குடும்ப ஓய்வூதியம், உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம், கருணைத்தொகை, பணவீக்க அட்டவணைக்கேற்ப ஓய்வூதிய பண பலன்கள் வழங்கப்படும். தெற்கு ரயில்வேயில் தற்போது ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை 81,311 ஆகும். இதில் 689 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 17,916 ஊழியர்கள் உட்பட மொத்தம் 18,605 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். மீதமுள்ள 439 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 62,267 ஊழியர்கள் உட்பட மொத்தம் 62,706 பேர் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க தகுதி பெற்றவர்கள். மதுரை ரயில்வே கோட்டத்தில் தற்போது ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை 8295 ஆகும். இதில் 50 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 1581 ஊழியர்கள் உட்பட மொத்தம் 1631 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். மீதமுள்ள 32 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 6632 ஊழியர்கள் உட்பட மொத்தம் 6664 பேர் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க தகுதி பெற்றவர்கள் என தெரிவித்தார்.

 இந்தத் திட்டத்தில் முக்கியமான 9 சிறப்பம்சங்கள் உள்ளன. அவை
- 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் பணி நிறைவுக்கு முந்தைய 12 மாதங்களின் பெற்ற சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50% ஓய்வூதியம் வழங்கப்படும்
- ஓய்வூதியர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு அவர் பெற்ற ஓய்வு ஊதியத்தில் 60% ஓய்வூதியம் வழங்கப்படும்
- 10 வருடங்கள் சேவை செய்த ஊழியர்களுக்கு  உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூபாய் 10,000 வழங்கப்படும் 
- பண வீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியங்கள் அட்டவணைப்படுத்தப்படும்
- அகில இந்திய நுகர்வோர் விலை குறையீட்டுக்கேற்ப நிவாரண படி வழங்கப்படும்
- ஓய்வு பெறும் நாளன்று உரிய கருணைத் தொகையுடன் மொத்தமாக பணப்பலன்கள் வழங்கப்படும். இது ஓய்வூதியத் தொகையை பாதிக்காது
- நடப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் அவர்களுக்கும்  ஏற்கனவே பெறப்பட்ட பண பலன்களை கணக்கிட்டுஉரிய நிலுவைத் தொகை வழங்கப்படும்.
- இந்த திட்டம் ஊழியர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே வழங்கப்படும்
- இந்தத் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு தொகை உயராது. ஆனால் அரசின் பங்களிப்பு 14 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக உயர்த்தப்படுதல் ஆகியவை ஆகும் என தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளருடன் கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், முது நிலை கோட்ட நிதி மேலாண்மை அதிகாரி டி. இசைவாணன், முதுநிலை கோட்டமின் பொறியாளர் வி. மஞ்சுநாத் யாதவ், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் பி. முகமது ஜுபைர் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Tags : மதுரை கோட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 6664 ஊழியர்கள் பயன்பெறுகிறார்கள்.

Share via